பசுமைகுமார் - இவர் தன் பெயரில் மட்டுமல்ல சமூகத்தின் சகல தரப்பு மக்களிடமும் குறிப்பாக நசுக்கப்பட்ட மக்களிடமும் 'பசுமை' செழிக்க வேண்டும் என்று விரும்புகிறவர். அதற்காகத் தனது பேனாவைப் பயன்படுத்துவது என்பதை லட்சியமாகக் கொண்டவர். கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகைத் துறை வானொலி, தொலைக்காட்சி மூலம் சிறுகதைகள், கவிதைகள், வரலாற்று நிகழ்வுகளைப் பதிவு செய்து 25-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி இருக்கிறார்.
தென்னிந்தியாவின் சார்லி சாப்ளின், என்.எஸ். கிருஷ்ணன், மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், சென்னை கடற்கரையைக் காப்போம், தேர்தல் - 2001, ஜனநாயகச் சோலை, லஞ்சத்திற்கு எதிராகக் குரல் கொடுக்கத் தூண்டும் ' டெத் சர்டிபிகேட்' என்ற குறும்படங்களை கதை- வசனம் எழுதி இயக்கி இருப்பவர். 'விழி தொட்ட தூரமெல்லாம்' என்ற கவிதைத் தொகுப்பு, 'ஒரு ஓவியரும் சில கவிக்கோடுகளும்' என்ற சிறுகதை தொகுப்பு உட்பட பல இலக்கியப் படைப்புகளைப் படைத்திருக்கும் பசுமைகுமார் 1999-ம் ஆண்டின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவராகத் தேர்வு செய்யப்பட்டு ஜோதி விநாயகம் அறக்கட்டளை விருது பெற்றுள்ளார்.
- பதிப்பகத்தார்.