புனைவாக்கப்பட்ட வரலாற்றின் மீதான தீவிரத்தாக்குதல்களே இக்கட்டுரைகள். கட்டமைக்கப்படும் வரலாற்றுக்கு எதிரான தரவுகள் புறக்கணிக்கப்படுகின்றன; மறைக்கப்படுகின்றன; முக்கியத்துவம் தரப்படாமல் போகிற போக்கில் ஒரு மூலையில் வைக்கப்படுகின்றன. பொ. வேல்சாமியின் கவனம் முழுவதும் இத்தகைய போக்கில் தகர்வை உண்டாக்கும் நோக்கில் செயல்படுகிறது. பொ. வேல்சாமி, புலவர் பட்டம் பெற்றவர். மரபான புலவர்களைப் போல் குறுகிய வட்டத்திற்குள் அடைபட்டுவிட்டவரல்ல. மொழி, இலக்கியம், தத்துவம், வரலாறு என எல்லாவற்றையும் முடங்கிவிட்ட வகையாகப் பார்த்து முடக்கமே பெருமை என்னும் ஊனப்பார்வையிலிருந்து முற்றிலுமாக விலகியவர் அவர்.‘ மாபெரும் விஷயங்களைச் சுருங்கச் சொல்லல், நீண்ட தொடரமைப்புகள் கொண்ட நடை, காரமான சொற்கள் எனக் கட்டுரைகள் சில குறைகளைக் கொண்டுள்ளன. அவற்றில் கவனம் வைத்து, தமிழக வரலாற்றின் சில பகுதிகளை வெளிச்சப்படுத்தும் வேலையில் முழுமையாக இறங்குவார் என்றால் பொ. வேல்சாமியின் பங்களிப்பு, ச. வையாபுரிப் பிள்ளை, தெ.பொ.மீ., கா. சிவத்தம்பி போன்ற அறிஞர்களின் பங்களிப்புக்கு நிகராக விளங்க முடியும். அதற்கு இந்நூல் ஒரு தொடக்கப்புள்ளி. -பெருமாள்முருகன்