மனப்பாடம், மதிப்பெண், தேர்வுகள் என்கிற அச்சில் சுழலும் நமது கல்விமுறை தரும் ஆயாசத்திலிருந்து தன் குழந்தைகளை விடுவிக்கவும், அவர்களுக்குச் சற்றே இளைப்பாறுதல் தந்து, புத்துயிர்ப்பளித்து, மீண்டும் நம்பிக்கையுடனும் புத்துணர்ச்சியுடனும் அவர்கள் களம் இறங்கவும், சமயபுரம் எஸ்.ஆர்.வி. பள்ளி நம்புவது கதைகளை. ஆண்டுதோறும் புதிய புதிய கதைகளைத் தொகுத்து மாணவ-மாணவியர்க்கு வழங்கி வருகிறது எஸ்.ஆர்.வி. பள்ளி. வகுப்பறையிலேயே கதை நேரமும் இணைக்கப்பட்டுள்ளது. நாம் எந்த உலகத்தில் இருக்கிறோம் என்கிற தன்னுணர்வைக் கதைகள் தருகின்றன. படித்து முடித்தபின் இப்படியான ஓர் உலகத்தில்தான் நாம் வாழப்போகிறோம் என்பதை இக்கதைகள் அறிமுகம் செய்கின்றன. இந்த உலகையும் பிரபஞ்சத்தையும் அறிந்து கொள்ளவும் அவற்றின் இயக்கங்களையும் பயணங்களையும் உட்கூறுகளையும் புரிந்துகொள்ளவும் எண்ணற்ற கருவிகளையும் எந்திரங்களையும் சூத்திரங்களையும் விதிகளையும் அறிவியல் உலகம் கண்டுபிடித்துள்ளது. மூளை உள்ளிட்ட மனித உடலின் ஒவ்வொரு உறுப்பின் செயல்பாடுகளை அறிந்துகொள்ளவும் கூட ஆயிரம் கண்டுபிடிப்புகள் உள்ளன. குணப்படுத்த பல்லாயிரம் மருந்துகள் மாத்திரைகள் உள்ளன. ஆனால்,மனித மனதில் நிகழும் அசைவுகள், துளிர்க்கும் அன்பு, பற்றி எரியும் வெறுப்பு, மூளும் பகையுணர்ச்சி, துரோகத்தின் கருநிழல், தியாகத்தின் பசுமை என மனங்களைப் புரிந்துகொள்ளவும் அவற்றின் வழி மானுட உறவுகளைப் புரிந்துகொள்ளவும் நமக்கிருக்கும் ஒரே விஞ்ஞானம், ஒரே கருவி- கலை, இலக்கியம் மட்டுமே. அதிலும் குறிப்பாக எல்லா வடிவங்களுக்கூடாகவும் சாரமாக இருப்பது கதை, கதை மட்டுமே.
No product review yet. Be the first to review this product.