ஜீ.முருகன் எழுதிய சிறுகதைகள் அடங்கிய ‘கண்ணாடி’ தொகுப்பின் கதைகள் மிக நேர்த்தியுடனும் கவனமாகவும் கட்டமைக்கப்பட்டுள்ளன. அவரது புனைவில் உருவாகும் நிலம், மனிதர்கள், நிகழ்வுகள், புதிர்த்தன்மை என அனைத்தும் சுவாரஸ்யத்துடன் இருக்கின்றன. ஆனால், சிறுகதையினை நகர்த்திச் சென்று முடிக்கும் இடத்தில் சோர்வே மேலிடுகிறது. அந்த சோர்வுக்கு அவற்றின் முடிவுகள் எதிர்பார்த்தபடியே இருப்பதும் அதனால் வாசகன் மனநிலையில் எவ்வித அதிர்வுகளையும் ஏற்படுத்தாமல் போவதுமே காரணங்கள். ‘கண்ணாடி’ சிறுகதை எனக்கு நல்ல கதையாக தெரிந்தது. ஆனால், அதன் முடிவும் படு சாதாரணமாகவே இருந்தது. பொதுவாக, ஒரு படைப்பு இழுவையாக இருக்கிறது, கதை இல்லை, முடிவு சரியில்லை போன்றவை பாப்புலர் தளத்தில் புலங்கும் பிரயோகங்கள் என்பது தெரிந்ததுதான். இங்கு நான் குறிப்பிடுவது, கதைகள் வாசகனை அசைக்கவில்லை என்பதுதான். முதல் நான்கு கதைகளில் படு சாதாரண, செயற்கையான கதையாக ‘பாம்பு’ கதையினைக் குறிப்பிடலாம். இக்கதை கவுண்டர் சாதிக்குள் நிலவும் ஆதிக்க சாதி வெறியினையும், தங்கள் குலப்பெருமைக்காக எதுவரையிலும் செல்லக்கூடியவர்கள் என்பதனையும் பதிவு செய்கிறது. எனக்கு, கன்னட எழுத்தாளர் விவேக் ஷன்பேக்கின் ‘கச்சார் கோச்சார்’ குறுநாவலே மனதில் வந்துகொண்டிருந்தது.
No product review yet. Be the first to review this product.